திங்கள், 27 ஏப்ரல், 2026
|
அரசியல்

பருத்தித்துறை நகர சபை விவகாரம்: ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் அதிரடித் தடை!

பருத்தித்துறை நகர சபை விவகாரம்: ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் அதிரடித் தடை!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 27, 2026 · 2 நிமிட வாசிப்பு

பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் இன்று (27.04.2026) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் டக்ளசு டி போல் மற்றும் சபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி அலெக்ஸ் ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

விசாரணைக்கான பின்னணி

பருத்தித்துறை மரக்கறிச் சந்தையைப் பழைய இடத்திற்கு மாற்றுவதற்குச் சபை எடுத்த தீர்மானம் உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து, தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக விசாரணை நடத்த ஆளுநரால் ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது. முன்னாள் மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் தலைமையிலான இந்த விசாரணைக் குழு தொடர்பான அரச வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2026 மார்ச் 12 அன்று வெளியிடப்பட்டது.

அரசியல் உள்நோக்கம் கொண்டதா?

இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றத்தில் பல முக்கிய வாதங்களை முன்வைத்தார். குறிப்பாக, நகரசபையின் சனநாயக ரீதியான தீர்மானங்கள் குறித்து விசாரணை நடத்த ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், குறித்த தீர்மானம் நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் 184 ஆவது பிரிவின் கீழ் எந்தவொரு குற்றத்திலும் அடங்காது எனவும், இதில் சட்ட விதிமீறல்கள் ஏதும் இடம்பெறவில்லை எனவும் அவர் வாதிட்டார்.

மேலும், வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதற்கு முன்பாகவே தகவல்கள் கசிந்தமை குறித்தும் அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். அதாவது, குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2026 ஏப்பிரல் 12 அன்று வெளியாவதற்கு முன்பே, ஏப்பிரல் 08 அன்றே நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பதிவிட்டிருந்தார். எனவே, இது முற்றிலும் ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே என்பதை இந்தச் செயற்பாடு உறுதிப்படுத்துவதாகவும் சட்டத்தரணி தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களின் வாதங்களில் முகாந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்டார். அதன்படி, இந்த வழக்கு இறுதித் தீர்மானத்திற்கு வரும் வரை பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கக் கூடாதென இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான பெனார்சி பிரதீபன், சி. அபினாசு ஆகியோரின் ஒத்துழைப்புடன் கலாநிதி கு. குருபரன் முன்னிலையாகியிருந்தார். குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குட்பட்ட சபைகளை இலக்கு வைத்து இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.