நுவரெலியா மாவட்டம், ராகலை டெல்மார் தோட்டப் பகுதியில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூர் அரசியல்வாதிகள் கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்மார் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிவதற்காக நேற்று காலை ஊடகவியலாளர்கள் அங்கு சென்றிருந்தனர். இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர், தமது ஆதரவாளர்களுடன் இணைந்து ஊடகவியலாளர்களை வழிமறித்துள்ளனர்.
அரசியல்வாதிகளின் மிரட்டல்
"எமது தோட்டப் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம்; வெளியில் இருந்து எவரும் உள்ளே வரக்கூடாது" எனத் தெரிவித்து, ஊடகவியலாளர்களைத் தோட்டத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஊடகவியலாளர்களோ அல்லது சமூகச் செயற்பாட்டாளர்களோ தோட்டத்திற்கு வந்தால் அவர்களை மக்கள் சந்திக்கக் கூடாது என கடந்த சில தினங்களாகவே குறித்த அரசியல்வாதிகள் அப்பகுதியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரியவருகிறது. "பிரச்சினைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன, ஊடகங்கள் இதனை மீண்டும் கிளற வேண்டாம்" எனக் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
காவல் துறையினரின் தலையீடு
ஊடகவியலாளர்கள் தமது கடமையின் நோக்கம் குறித்து விளக்கமளித்த போதிலும், அரசியல்வாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மக்களின் உண்மை நிலவரங்கள் மற்றும் குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வருவதைத் தடுக்கும் நோக்கில், மக்கள் பிரதிநிதிகளே ஊடகச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இவ்வாறு செயற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

