உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து கொண்டிருக்கின்றது. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை நினைவுகூருவதுடன், இன்றும் பதில்களுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுடன் துணை நிற்கின்றது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche), உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாதிக்கப்பட்டவர்களுடன் ஐ.நா. துணை நிற்கும்
"2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நாம் நினைவுகூருகிறோம். உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் தங்களது வாழ்க்கையை நிரந்தரமாக இழந்து தவிக்கும் பல குடும்பங்கள் மற்றும் சமூகங்களை நாம் எண்ணிப் பார்க்கிறோம்.
ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாம் துணை நிற்கிறோம்; அவர்களது நினைவைக் கௌரவிக்கிறோம்.
சட்ட நடவடிக்கைகள் மீதான உத்வேகம்
இந்த நினைவு தினமானது, தாக்குதல்களுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ள ஒரு காலப்பகுதியில் வந்துள்ளது. இத்தகைய விசாரணைகள் மற்றும் நீதித்துறைச் செயல்முறைகள் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும், நியாயமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும் மற்றும் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இன்றியமையாதது
நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான அரசாங்கத்தின் பகிரங்க அர்ப்பணிப்புகளுடன் இணைந்து எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. இந்த முயற்சிகள் தெளிவான மற்றும் நம்பகமான முடிவுகளுக்கு வழிவகுப்பதே தற்போது அவசியமானதாகும்.
நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கும், விதிவிலக்கின்றிச் சட்டத்தின் ஆட்சியைத் தொடர்ந்து நிலைநாட்டவும் அர்த்தமுள்ள முன்னேற்றம் இன்றியமையாதது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு தொடரும்
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் நீதியை மேம்படுத்தும் சுதந்திரமான, நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் மற்றும் நீதித்துறைச் செயல்முறைகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து கடமைப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களை நாம் நினைவுகூரும் வேளையில், நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், அனைத்துச் சமூகங்களும் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதிப்படுத்தவும் நாட்டின் நிறுவனங்கள் தங்களது அர்ப்பணிப்புகளை நிறைவேற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.