உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரூ ஜோஸ்வோலெஸ் (Monsignor Andrez Jozwowlez) இன்று தெரிவித்துள்ளார்.
கொழும்பு புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “இந்த நினைவேந்தல் நிகழ்வானது பழிவாங்கும் உணர்வுடன் இருக்கக் கூடாது. மாறாக, இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனேயே இது அமைய வேண்டும். உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின்னரே மன்னிப்பு என்பது சாத்தியமாகும்” எனத் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருச்சபைப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டனர். நீதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை வத்திக்கான் பிரதிநிதி தனது உரையில் பன்னாட்டுச் சமூகத்திற்கும் இலங்கை அரசிற்கும் மீண்டுமொருமுறை நினைவுபடுத்தியுள்ளார்.