வெள்ளி, 10 ஏப்ரல், 2026
|
தாயகம்

நிலவுரிமை வேண்டிப் பதுளையில் மலையகத் தமிழர்களின் பேரணி!

நிலவுரிமை வேண்டிப் பதுளையில் மலையகத் தமிழர்களின் பேரணி!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 10, 2026 · 1 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழ் மக்களின் நிலவுரிமையைக் கோரி ஏப்பிரல் 2 ஆம் நாள் பதுளையில் கவன ஈர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. இலங்கையில் மலையகத் தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் புறக்கணிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டும் 'நிலவுரிமையின்மை' தொடர்பில் குரலெழுப்பும் நோக்கில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல தலைமுறைகளாகப் பெருந்தோட்டங்களில் உழைத்து வரும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் இதில் ஒன்றுகூடினர்.

நகரினூடாகப் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், ஊவா மாநில ஆளுநர் அலுவலகத்தை அடைந்து, தமக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வைக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இடைக்காலத் தீர்வுகளைக் கைவிட்டு, நிலையான கட்டமைப்பு மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் முதன்மைக் கோரிக்கையாக இருந்தது.

தனியார் நிலவுரிமையை வழங்க வேண்டும், நிலையான தனிவீட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் மற்றும் இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதியான வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் அரசை வலியுறுத்தினர். குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் சிறிலங்காவை 'டிட்வா' (Ditwah) புயல் தாக்கிய போது, மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்குகளால் மலையகத் தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் முடிவில், இக்கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மடல் ஒன்று மாநில அலுவலர்களிடம் கையளிக்கப்பட்டது.

பல தலைமுறைகளாக அடிப்படை உரிமையையும் பாதுகாப்பையும் மறுத்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் வரிசைக் குடியிருப்புகளின் எல்லைகளைத் தாண்டி, இந்நாட்டில் தமக்கும் வாழ்வதற்கான உரிமை இருப்பதை நிலைநாட்டுவதாகவும் இப்போராட்டம் அமைந்திருந்தது எனப் பலரும் தெரிவித்தனர்.

அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவத்தை முன்னெடுப்பதாகச் சிறிலங்கா அரசு தொடர்ந்து வழங்கிவரும் உறுதிமொழிகளின் மீது இப்போராட்டம் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும், மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால நிலச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் சிறிலங்கா அரசு தவறிவிட்டது என்பதையே மக்களின் இந்தக் கொந்தளிப்பு காட்டுகிறது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.