யாழில் அடையாள அட்டை இல்லை ; வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்ற சிறிலங்கா காவல்துறை
சிறிலங்கா அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பத்தர் ஒருவரை காங்கேசன்துறை காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். கைது தொடர்பில் குறித்த நபர் தனது வீட்டாருக்கு அறிவிப்பதற்கு ஒப்புதல் வழங்காது அவரது கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த குடும்பத்தர் வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு காலையில் நடந்து சென்ற வேளை முச்சக்கர வண்டியில் நின்ற காவல்துறையினர் அவரை அழைத்து, சிறிலங்கா அடையாள அட்டையை கோரினார்.
அச்சத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தர்
அருகில் உள்ள கடைக்கு நடந்து வந்ததால், தான் வீடு எடுத்து வந்து தருகிறேன் என கூறிய போது அவரை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் காவல்துறையினர் இழுத்து ஏற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கு விசாரணைகளை முன்னெடுத்து, கையெழுத்து வாங்கி, இரண்டு கைகளின் அடையாளங்களையும் பெற்று , உடம்பில் உள்ள அங்க அடையாளங்களையும் குறித்துக்கொண்டனர்.
அதற்கு இடையில் அடையாள அட்டை இல்லை என காவல்துறையினர் கணவனை கைது செய்து கொண்டு சென்றனர் என மனைவிக்கு அயலவர்கள் கூறியதை அடுத்து, பதறியடித்த பெண் அயலவரிடம் அடையாள அட்டையை கொடுத்தனுப்பியதுடன், காவல் நிலையம் சென்றுள்ளார்.
அதற்கு இடையில் அடையாள அட்டையை காவல் நிலையத்தில் அயலவர் கொண்டு வந்து கொடுத்ததும், கைதானவருக்கு உணவளித்து, அவரை விடுவித்தனர். மனைவி காவல் நிலையம் வந்ததும், கணவனை கைது செய்த இடத்திலையே தாமே கொண்டு வந்து விடுவதாக கூறி மீண்டும் முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து கைது செய்த இடத்திற்கு அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தன்னிடம் பெற்ற கைரேகையால் பின்னாட்களில் சிறிலங்கா காவல்துறையினர் ஏதேனும் வழக்குகளை தொடுத்து விடுவார்களோ என்ற பயம் தனக்கு இருக்கிறது என பாதிக்கப்பட்ட குடும்பத்தர் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.