செவ்வாய், 24 மார்ச், 2026
|
விளக்கம்

'வீழ்த்தப்பட முடியாத' அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதா?

அமெரிக்காவின் அதியுயர் F-35 போர் விமானம் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மறைந்து தாக்கும் வல்லமை கொண்ட இவ்விமானம், ஈரானிய வான்பரப்பில் வைத்து இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

'வீழ்த்தப்பட முடியாத' அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதா?
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மார்ச் 24, 2026 · 4 நிமிட வாசிப்பு

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்காவின் F-35 போர் விமானம் ஈரானியப் படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய கிழக்கு: அமெரிக்காவின் வான்படை பலத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் F-35 மின்னல்-2 (F-35 Lightning II) ரக போர் விமானம் ஒன்று, ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுத் திரும்பிய வேளையில் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க வான் தளம் ஒன்றில் இவ்விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ரடார்களில் சிக்காத (Stealth Technology) மற்றும் 'வீழ்த்தப்பட முடியாதது' என வர்ணிக்கப்படும் இவ்விமானம் ஈரானால் தாக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் பட்சத்தில், இது அமெரிக்காவின் வான் ஆதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலாகவே பார்க்கப்படும்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:

வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த அவசர தரையிறக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) ஊடகப் பேச்சாளர் கப்டன் டிம் ஹாக்கின்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதாகவும் விமானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். "இச்சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என்று மட்டும் தெரிவித்த அவர், விமானம் எங்கு அல்லது எதனால் தரையிறக்கப்பட்டது என்பது குறித்த மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

அதேவேளை, அமெரிக்க விமானம் ஒன்றைத் தாம் இலக்கு வைத்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) அன்றைய தினமே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்க வான்படை செய்திகளை வெளியிடும் 'Air & Space Forces Magazine' சஞ்சிகையானது, பெயர் குறிப்பிட விரும்பாத தரப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டிச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், நிலத்திலிருந்து ஏவப்பட்ட தாக்குதலினால் விமானம் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் விமானி சிதறுதுண்டுகள் பட்டு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான தஸ்னீம் (Tasnim), ஈரானிய வான் பாதுகாப்பு கட்டமைப்பு அமெரிக்க F-35 விமானத்தைத் தாக்கும் இராணுவக் காணொளிப் பதிவுகளையும் பகிரங்கப்படுத்தியுள்ளது.

F-35 போர் விமானம்: அதன் சிறப்பம்சங்கள் என்ன?

-35 என்பது அமெரிக்காவின் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான லொக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) தயாரிப்பான ஒரு நவீன போர் விமானக் கட்டமைப்பாகும். 'F-35 மின்னல்-2' (F-35 Lightning II) என அழைக்கப்படும் இவ்விமானம், "உலகின் அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட போர் விமானம்" என அந்த நிறுவனத்தால் பெருமையுடன் வர்ணிக்கப்படுகின்றது.

இவ்விமானத்தின் பலமானது, அதன் மறைந்து தாக்கும் (Stealth) தொழில்நுட்பம், அதிநவீன உணர்கலன்கள் (Sensors) மற்றும் அதிவேகக் கணினி கட்டமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் தங்கியுள்ளது. முந்தைய தலைமுறை போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில், இது எதிரிகளின் ரடார்களில் (Radar) இலகுவில் சிக்காது என்பதுடன், போர்க்களச் சூழல் குறித்த பரந்தளவிலான தகவல்களைத் திரட்டும் வல்லமை கொண்டதாகும்.

இது குறித்துப் பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் இராணுவத் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான ஜோன் பிலிப்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்:

"F-35 விமானத்தின் ரடார் கட்டமைப்பே அதன் மிக முக்கியமான பாகமாகும். இது நாட்டுக்கு நாடு மாறுபட்டதாகவே வழங்கப்படுகின்றது. குறிப்பாக, சில நாடுகளுக்குக் குறிப்பிட்ட ரடார்களே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. சீனா அல்லது ரஷ்யா போன்ற எதிரி நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பிரதி எடுப்பதைத் தடுப்பதற்காகவே இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக நம்பப்படுகின்றது."

F-35 போர் விமானங்கள் மூன்று வெவ்வேறு வகைகளைக் கொண்டுள்ளன:

  1. F-35A: சாதாரண ஓடுபாதைகளைப் பயன்படுத்துபவை.

  2. F-35B: உலங்குவானூர்திகளைப் (Helicopter) போன்று செங்குத்தாகத் தரையிறங்கக் கூடியவை.

  3. F-35C: கடற்படையினரின் நீண்டதூரத் தாக்குதல் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டவை.

தற்போது ஈரான் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படும் விமானம், இவற்றுள் எந்த வகையைச் சார்ந்தது என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது?

2018 ஆம் ஆண்டு முதல் நேரடிப் போர் நடவடிக்கைகளில் F-35 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரை எதிரிகளின் எவ்விதத் தாக்குதல்களினாலும் இந்த விமானங்கள் பாதிக்கப்பட்டதாக எவ்வித உறுதியான சான்றுகளும் இல்லை.

இது குறித்துச் சர்வதேச நெருக்கடிக் குழுவின் (International Crisis Group) ஈரானியத் திட்டப் பணிப்பாளர் அலி வாஸ் (Ali Vaez) கருத்துத் தெரிவிக்கையில்:

"இந்தச் சம்பவம் மிகவும் உற்றுநோக்கத்தக்கது. இதன் பொருள் 'மறைந்து தாக்கும்' (Stealth) தொழில்நுட்பம் முற்றாக வலுவிழந்துவிட்டது என்பதல்ல; மாறாக, எதிரிகளின் அடர்த்தியான மற்றும் நவீன வான் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு மத்தியில் F-35 போன்ற அதியுயர் போர் விமானங்களும் கூடப் பாதுகாப்பற்றவை என்பதையே இது காட்டுகின்றது."

இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் விரும்பிய இடமெல்லாம் எமது விமானங்கள் பறக்கின்றன; எம்மீது எவரும் தாக்குதல் நடத்தவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், F-35 போர் விமானம் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை அமெரிக்க உயர் அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

போர் நடவடிக்கைகளில் இதுவரை வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள்

பெப்ரவரி 28 அன்று ஆரம்பமான அமெரிக்க - இஸ்ரேலியப் படைகளின் கூட்டுத் தாக்குதல் நடவடிக்கைகளின் போது, இதுவரை 12 MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) வகை ஆளில்லா உளவு விமானங்கள் (Drones) வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, மார்ச் 14 அன்று சவூதி அரேபியாவிலுள்ள வான் தளம் ஒன்றின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவின் ஐந்து KC-135 எரிபொருள் நிரப்பும் போர் விமானங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. எனினும், இத்தகவல்கள் இதுவரை சுயாதீனமான தரப்புக்களினால் உறுதிப்படுத்தப்படவில்லை.

முன்னதாக மார்ச் 1 அன்று இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில், குவைத்தின் F/A-18 போர் விமானம் ஒன்று தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலினால், அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle) ரக விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இச்சம்பவத்தின் போது விமானங்களிலிருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹார்முஸ் தீவுக்கு (Hormuz Island) அருகில் அமெரிக்காவின் F-15 போர் விமானம் ஒன்றை இடைமறித்துத் தாக்கியதாக ஈரான் உரிமை கோரியிருந்தது. இருப்பினும், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) இக்கோரிக்கையை முற்றாக மறுத்துள்ளது. 'ஒபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) என்ற பெயரிலான இந்த இராணுவ நடவடிக்கையில், இதுவரை 8,000-ற்கும் மேற்பட்ட போர் விமானப் பறப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், ஈரான் எந்தவொரு அமெரிக்கப் போர் விமானத்தையும் வீழ்த்தவில்லை என அமெரிக்கத் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.