திங்கள், 23 மார்ச், 2026
|
தினசரி செய்திகள்

மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் மீனவர்கள் கடனாளியாகும் அவலம் - எம்.ஆலம் தெரிவிப்பு

மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் மீனவர்கள் கடனாளியாகும் அவலம் - எம்.ஆலம் தெரிவிப்பு
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மார்ச் 23, 2026 · 4 நிமிட வாசிப்பு

உலகளாவிய ரீதியில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அதனால் இலங்கையும் அந்த தாக்கத்தின் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருக்கின்றது குறிப்பாக வடமாகாணத்தில் கரையோரங்களை அண்டிய மாவட்டங்களில் மீனவர்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (23) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் முகங்கொடுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாகவும், சர்வதேச ரீதியில் நடைபெறுகின்ற போர் நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு, அதை கையாளுகின்ற வகையிலே அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை நாங்கள் சற்று ஆராய வேண்டியிருக்கின்றது.

குறிப்பாக உலகளாவிய ரீதியில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால் இலங்கையும் அந்த தாக்கத்தின் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. குறிப்பாக வடமாகாணத்தை எடுத்துக்கொண்டால், கரையோரங்களை அண்டிய மாவட்டங்களான மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற மாவட்டங்கள் நேரடியாக மீனவர்களைக் கொண்ட வாழ்வாதாரத்தின் ஊடாக இயக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலத்தில் பல விடயங்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். பொருளாதார நெருக்கடி, நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி, அதற்கு அப்பால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களும், அதற்கப்பால் 'டிட்வா' புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்று தொடர்ச்சியாக மீனவர்கள் முகங்கொடுத்து கொண்டிருக்கின்ற பிரச்சினைகளோடு, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு, அதற்கப்பால் இனி வருங்காலங்களில் ஏற்படப்போகின்ற பொருட்களுக்கான விலையேற்றங்கள் அல்லது அதற்கான கட்டுப்பாடுகளை எவ்வாறு இந்த மக்கள், வடபகுதியில் வாழுகின்ற மக்கள் எவ்வாறு முகங்கொடுக்க போகிறார்கள் என்ற அச்சநிலை ஏற்பட்டிருக்கிறது.

நாங்கள் மீனவர்கள் மத்தியிலே இருக்கின்ற அச்ச நிலையைக் கருத்தில் கொண்டால், தற்போது மன்னார் மாவட்டத்திலும் சரி, வட மாகாணத்திலும் சரி, மண்ணெண்ணெய் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

அந்தத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு அரசு நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலே பகிர்ந்தளிக்க கூடிய நடைமுறையாக QR என்ற நடைமுறையை பயன்படுத்துகின்றது.

மன்னார் மாவட்டத்தில் கிட்டத் தட்ட மன்னாரில் 3,500 குழைம (பிளாஸ்டிக்) படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்களும் இருக்கின்றன. அதற்கப்பால் ஒரு நாள் படகுகளாக 250 படகுகள் டீசலைப் பயன்படுத்துகின்ற படகுகள் காணப்படுகின்றன.

இதற்கான எரிபொருளை வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்த போதிலும், தற்போது வரை இந்த மீனவர்களுக்கு அவ்வாறான நெருக்கடி நிலை பெரிதாக ஏற்படவில்லை. இருந்தபோதிலும் இப்போது இருக்கின்ற நிலையிலே ஒரு படகுக்கான எரிபொருள் தேவையாக நாள் ஒன்றுக்கு 30 தொடக்கம் 40 லிட்டர் வரையிலான மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது.

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் 25 லிட்டரும், பெட்ரோல் அரை லிட்டரும் நாள் ஒன்றுக்கான மீனவருக்கான பங்கீடாக வழங்கப்பட்ட போதிலும், அந்த எரிபொருள் கூட சில நேரங்களில் மீனவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.

எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறோம். எதிர்வரும் காலங்களிலே அண்மையிலே நாங்கள் அமைச்சரவையை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் கூறுகின்றார், மே மாத அளவில் முற்றுமுழுதாக எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்துகின்றார்.

நாட்டிலும் உலகத்திலும் ஏற்படுகின்ற இவ்வாறான சூழ் நிலையை நாங்களும் இதில் பங்கெடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே நாட்டுக்காகவும் நாங்கள் சில விடயங்களைத் தியாகம் பண்ண வேண்டியும் இருக்கின்றது. அந்த வகையிலே மீனவருக்கான எரிபொருள் விலையேற்றம் மீனவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

குறிப்பாக மண்ணெண்ணெய்க்கு விலை 60 ரூபாவால் உயர்த்தப்பட்டிருக்கிறது. 60 ரூபாவினால் உயர்த்தப் பட்டிருக்கின்ற நிலையிலே, ஒரு நாள் படகுக்கு எரிபொருள் தேவைக்காக மண்ணெண்ணெய், ஓயில், பெட்ரோலுக்காக கிட்டத்தட்ட 15,000 தொடக்கம் 20,000 வரையிலே மீனவர்கள் செலவிட வேண்டி இருக்கிறது.

இதற்கப்பால் அந்த மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக மூன்று பேர் கடலுக்குத் தொழிலுக்குச் செல்கின்றார்கள். கிட்டத்தட்ட அவர்களின் உழைப்பாக கிட்டத்தட்ட 30,000 குறைவான உழைப்பு கிடைக்குமாக இருந்தால் அவர்கள் கடனாளியாக கூடிய சூழல் ஏற்படுகின்றது.

எனவே நாங்கள் எதிர்பார்ப்பது இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்குள் நாங்கள் வாழ்கின்றோம். அந்த கட்டுப்பாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டில் நாங்களும் ஒரு பங்காளராக இருக்கின்றோம். எனவே சுயமாக நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. எரிபொருளை ஒரு கச்சிதமாகப் பயன்படுத்துவதோடு இந்த விலையேற்றத்தின் போது அதனை கையாளுகின்ற விதத்திலும் நாங்கள் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. இருந்தபோதிலும் அரசு இவ்வாறான விலையேற்றத்தின் போது மீனவர்களுக்குச் சில சலுகைகளை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

எனவே மீனவர்களின் வாழ்வாதாரம் இந்த கடலை நம்பி இருக்கின்றது. இந்தக் கடலின் ஊடாக நாங்கள் கடந்த காலங்களிலே பல துன்பங்களை அனுபவித்திருக்கிறோம். இந்திய மீனவர்களாக இருக்கட்டும், டிட்வா புயலாக இருக்கட்டும், தொடர்ச்சியான இந்த அழுத்தங்களுக்கு அப்பால் இன்று விலையேற்றத்திற்கு நாங்கள் முகங்கொடுக்கின்றோம்.

அதேபோன்று எதிர்காலத்தில் இந்த எரிபொருள் தட்டுப்பாடு வரும் பட்சத்திலே நாங்கள் முகங்கொடுக்கின்ற விடயத்திற்கு முன்கூட்டியதாக, குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இருக்கின்றன. அந்த மீனவ கிராமங்களில் 40 க்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்கின்றன. மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள், மீன்பிடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் இருக்கின்றன.

அதன் ஊடாக நாங்கள் மீனவர்களுக்கு எரிபொருளை வழங்கும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருக்கும் அந்த வரிசையை, தொடர் வரிசையை இல்லாமல் ஆக்கி சங்கங்கள் ஊடாக இந்த எரிபொருளை வழங்கும்போது சங்கங்கள் தங்கள் சங்கங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுத் தங்கள் அங்கத்தவர்களுக்கு வழங்கக் கூடியதாக இருக்கும்.

எனவே இது எதிர்காலத்தில் பின்பற்றப்பட வேண்டும். கடந்த காலத்தில், அதாவது பொருளாதார நெருக்கடியின் போது இவ்வாறான நிலை கையாளப்பட்டதால் தான் மீனவர்களுக்கு தட்டுப்பாடும் அந்த ஒழுங்கு வரிசையும் பின்பற்றப்பட்டு இருந்தது.

எனவே அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். கடற்றொழில் திணைக்களங்களும் இதில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இருக்கின்ற வரவிருக்கின்ற நாங்கள் கட்டுப்பாடுகளுக்கு முகங் கொடுக்கின்ற வகையிலே மீனவ கூட்டுறவு சங்கங்கள் ஊடாக எரிபொருளை வழங்கக்கூடிய வாறும், மீனவர்களுக்கான சில சலுகைகளை அரசாங்கம் வழங்கி மீனவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு கை கொடுக்க வேண்டும் என்று தயவாக கேட்டுக்கொள்கின்றோம்.

அந்த அடிப்படையில் எதிர்காலத்திலே மீனவருக்கான எரிபொருள் விலையேற்றத்தின் போது மீனவருக்கான ஒரு சலுகையை அரசு அறிவித்து, அந்த மீன்பிடி நடவடிக்கையை ஊக்கப் படுத்துவதோடு அவர்களின் வாழ்வாதாரத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.