ஐக்கிய நாடுகள் சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், சிறி லங்காவில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை வடக்கிலிருந்து முன்னறிவித்தலின்றி வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க ஏதுவாக அமைந்து விட்டது என அவர் குற்றம் சுமத்தினார்.
யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த போதும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை.
அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை எனவும், இனப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறி லங்காக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை சந்தித்த போது நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இது தொடர்பில் கலந்துரையாடினார்.
மேலும் ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐ.நா சபை தங்களைக் கைவிட்டு விட்டதாக நினைப்பதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், ஈழத்தமிழ் மக்களைக் கைவிட்டதை போன்று, மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.
