சிறி லங்காக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி – சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார்.
புதைகுழிகளைப் பார்வையிட சென்ற ஐ. நா உயர்ஸ்தானிகர், அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா தீபம்” போராட்ட களத்திற்கு நேரில் சென்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


