உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்டவற்றை இலங்கை சந்திக்க நேரிடும் என்று பொருளாதார ஆய்வாளர் தயநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.
எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்படாவிட்டால் பின்நாட்களில் ஏனைய விளைவுகள் ஏற்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது. அத்தோடு இராஜதந்திர ரீதியிலும் திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக இவ்வாறான நிலைமைகளால் இலங்கையில் பொருளாதார மந்த நிலைமை ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகிறது.
2028இல் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் கூடும். எனவே பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். எவ்வாறிருப்பினும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இதற்கு பொறுத்தமான தீர்வாக அமையாது.
ஆனால் உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையில் எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்பட்டால், இறக்குமதிகள் இயல்பாகவே மட்டுப்படும்.
விலைகள் உயர்வடையும் போது அவற்றின் பாவனைகளும் படிபடிப்படியாகக் குறைவடையும். எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில் ஏனைய இறக்குமதிகளுக்கான செலவினையும், எரிபொருள் இறக்குமதியில் உள்ளடக்க வேண்டும்.
இவ்வாறான நிலைமையில் முறையான நிதி முகாமைத்துவம் இல்லாவிட்டால் அந்நிய செலாவணி இருப்பிலும் அது தாக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்புள்ளது. அதனை விடுத்து நேரடியாக இறக்குமதிகளால் அந்நிய செலாவணி இருப்பிற்கு பாதிப்பு ஏற்படாது.
காரணம் ஏற்றுமதி வருவாய், சுற்றுலாத்துறை வருவாய் உள்ளிட்ட சேவை ஏற்றுமதியூடாக கிடைக்கப் பெறும் டொலர்களே இறக்குமதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
ரூபாவின் பெறுமதியைப் பேணுவதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாறாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

