கடந்த வியாழக்கிழமை (12.06.2025) அன்று சிறிலங்காவின் அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜெர்மனியில் மூத்த அரச அதிகாரிகளுடன் சந்தித்தபோது, அவரை எதிர்கொண்ட ஜெர்மன் தமிழர்களினால் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்புகள், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதத்தன்மையற்ற இனப்படுகொலை, இனஅழிப்பு குற்றங்களுக்கு நீதி கோரியவையாகும்.
ஜேர்மனியின் தலைநகர் பெர்லின் உள்ள பெல்வ்யூ அரண்மனையில் ஜெர்மன் அரச தலைவர் ஃப்ராங்க்-வால்டர் ஷ்டைன்மையர் அவர்களால் சிறிலங்காவின் அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாக வரவேற்கப்பட்டபோது, அரண்மனைக்கு வெளியே ஜேர்மன் தமிழர்கள் பெருந்திராளனோர் திரண்டனர்.

அதிகமான பாதுகாப்புடன் அனுரகுமாரவின் வாகனப் பேரணி அங்கு வந்தபோது, போராட்டக்காரர்கள் 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு தற்போது வரையில் நீதி வழங்கப்படாமை மற்றும் பொறுப்புக் கூறப்படாமைக்கு எதிராக கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மன் இராணுவத்தின் மரியாதை காப்புப் படை அணிவகுப்பு நடைபெற்றபோதிலும், போராட்ட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் குரல்கள் ஜேர்மன் அரச தலைவர் மாளிகை வளாகத்திற்குள் ஒலித்துக்கொண்டே இருந்தன.
இதேவேளை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, சிறிலங்கா அரசினால் தெடர்ந்து முன்னெடுக்கப்படும் தொடர் மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதி வழங்கத் தவறியமை குறித்து ஜெர்மன் அரசால் திசாநாயக்கேவிடம் கேள்வி கேட்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

“சிறிலங்காவும் ஜெர்மனியும் புதிய ஆட்சியாளர்களைப் பெற்றுள்ளன. இருப்பினும், அனுரா குமார திசாநாயக்கேவின் பெர்லின் வருகையின் போது ஜெர்மன் தலைவரான கன்சலர் ஃப்ரிட்ரிக் மெர்ஸ் அவரால் எடுத்துரைக்கப்பட வேண்டிய முக்கியமான மனித உரிமை சிக்கல்கள் பல ஆண்டுகளாக நீடிக்கின்றன,” என ஜெர்மனிக்கான மனித உரிமைகள் கண்பாணிப்பு அமைப்பின் இயக்குநர் பிலிப் ஃப்ரிஷ் கூறினார்.
தொடர்ந்து, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருப்பதாவது: சிறிலங்காவின் தொடர்ச்சியான அரசுகள், போர் குற்றங்களில் தொடர்புடைய முக்கிய அதிகாரிகளை பாதுகாத்து வருவதுடன், ஐநா மனித உரிமைகள் பேரவையின் நீதிக்கான முயற்சிகளை தடுக்க முயற்சித்து வருகின்றன.
அந்தநேரத்தில், சிறிலங்கா அரச தலைவரின் ஊடக பிரிவு, ஜெர்மன் அதிகாரிகளுடன் திசாநாயக்கே நடத்திய சந்திப்புகளில் பொருளாதாரமும் வர்த்தகமும் மையக் கருத்தாக இருந்ததாகக் குறிப்பிட்டு, அதனை முன்னிறுத்தி செய்திகளை வெளியிட்டது.
அனுரகுமார பெர்லின் உள்ள வால்டார்ஃப் அஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் ஜொஹன் வாடெஃபுலுடன் சந்தித்தார். அந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது, குறிப்பாக வர்த்தகம், எண்ணியல்ப் பொருளாதாரம், முதலீடுகள் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாக சிறிலங்கா அரச தலைவரின் ஊடக பிரிவு தெரிவித்தது.

அன்று காலை, அனுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் அரசதலைவர் ஷ்டைன்மையரால் பெல்வ்யூ, அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். ஜெர்மன் ஆயுதப்படை மரியாதைக் காப்புப் படையுடன் நிகழ்வு நடைபெற்றது.
மனித உரிமைகள் அல்லது நீதி தொடர்பான விவாதங்கள் அந்த சந்திப்புகளில் இடம்பெற்றதா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால், தமிழர்களின் இந்த போராட்டம், 2009ஆம் ஆண்டுக்குப் பிந்தைய இனஅழிப்பு குற்றங்களுக்கு நீதியே முக்கியமான தீர்க்கப்படாத விவகாரமாக தொடருவதை வலியுறுத்தியது. அதேசமயம், வடக்கு – கிழக்கு ஈழத் தமிழர்கள் இன்னும் அத்துமீறல்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதையும் நினைவுபடுத்தியது.



