கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீயுயர் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்களவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய எட்டு இடங்களில் 5 இடங்களுக்கு தமிழர்களும், 3 இடங்களுக்கு முசுலீம்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும் நீக்கவும் அதிகாரமுள்ள மீயுயர் சபையாக பல்கலைக்கழகப் பேரவை காணப்படுகின்றது. அந்தவகையில் வெளிவாரி உறுப்பினர்களில் பெரும்பாண்மையினராக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுயாட்சியில் பாரிய செல்வாக்கினைச் செலுத்தும் சூழல் எழுந்தள்ளது.
ஏனைய தமிழ்ப் பல்கலைக்கழகமான விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்களவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டள்ளனர். அதேவேளை வவுனியாப் பல்கலைக்கத்தின் 07 வெளிவாரி உறுப்பினர்களில் 03 சிங்களவர்கள், 03 தமிழர்கள், 01 முசுலீம் என்ற அடிப்படையில் உறுப்பினர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் தொடர்ந்து ஆட்சிக்கும் வரும் ஒவ்வொரு அரசுகளும் வடக்கு – கிழக்கின் ஒவ்வொரு நிர்வாகக் கட்டமைப்புக்களையும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சிங்களமயப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஆறும் ஜே.வி.பி அரசு நிர்வாகக் கட்டமைப்புக்களிற்கு மேலதிகமாக கல்வி நிறுவனங்களையும் சிங்களமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
வடக்கு – கிழக்கின் பிராந்திய பண்பாட்டுப் பல்கலைக்கழகங்களாக விளங்கும் யாழ்ப்பாண, கிழக்கு, வவுனியாப் பல்கலைக்கழங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற அடிப்படையில் சிங்களமயமாக்கப்படும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
