வட மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரை பாதுகாத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எதிர்வரும் காலத்தில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நல்லூர் பிரதேச சபையில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைச்சாத்திட்டனர்.
இது பற்றி அன்றைய தினம் கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். இருப்பினும் தமது சங்கு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என அவர்கள் நிபந்தனைகளை விதித்திருந்தனர்.
அந்த நிபந்தனைகளுக்கு உடன்பட முடியாது என்பதால் நாம் தனித்துச் செயற்பட்டோம். இந்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதை விடவும், தமிழரசுக் கட்சியுடன் இணைவது எமக்கு அதிக சந்தோஷத்தை அளிக்கின்றது.” – என்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலப் பகுதியில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
இது தொடர்பில் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜூன் 14 ஆம் திகதி அப்போதைய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் கையளிக்கப்பட்டது.
அவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, அந்த நெருக்கடியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரனைப் பாதுகாத்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரலாறை விக்னேஸ்வரன் மறந்துவிட்டார். எதிர்வரும் காலத்தில் தமிழரசுக் கட்சியால் விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகளில் இருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை.” – என்றார்.
