யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நட்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலாளரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் ஊடாக உரிமையாளர்களுக்கான காணிகளை கையளிப்பார்.
விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும், அதனை ஒரு மாத காலத்துக்குள் நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
குறித்த விகாரைக் கட்டமானது இராணுவத்தினால் தனியார் காணிக்குள் அத்துமீறி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோதக் கட்டம் பிரதேச சபையினது உரிய சட்ட பூர்வ அனுமதிகள் ஏதுமின்றி கட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த காணியின் உரிமையாளர்கள் தமது காணிக்கு நட்ட ஈடோ அல்லது மாற்றுக் காணியோ வேண்டாம் என நிராகரித்துள்ள நிலையில், குறித்த காணிக்கு நட்ட ஈட்டினை வழங்கி குறித்த சிக்கலை பூசி மெழுகுவதற்கு சிறிலங்கா அரசும் அதன் முகவர்களும் முயன்று வருகின்றனர்.
