மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரையும் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைதான நான்கு இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதனையடுத்து, மேலதிக விசாரணைகளின் பின்னர், அவர்கள் நால்வரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அந்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
