உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் சம்பந்தமாகத் தொகுதி ரீதியாக இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தொகுதி ரீதியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதுடன், மாவட்ட ரீதியாகக் கலந்துரையாடி இறுதி தீர்மானங்கள் எட்டப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள முறைமை தொடர்பில் தங்களது உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய தேர்தல் முறைமைக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களில் தனியானதொரு கட்சி ஆட்சியமைக்க முடியாது என்பதனை அனைவரும் இப்பொழுது புரிந்துள்ளனர்.
இந்தநிலையில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
இதனடிப்படையிலேயே தொகுதி ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் தனியாகவும் சில இடங்களில் மாற்று அணுகுமுறையைப் பின்பற்றியும் தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவையும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அடிப்படையில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாமும் கட்சியின் தலைவரும் தயாராகி வருவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
