எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படும் எனவும் கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்வித் துறையிலும், ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் போன்ற சேவைகளிலும் உள்ள பல பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த சேவைகளில் பதவி உயர்வுகள், வேதன முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் முறையான இடமாற்றங்கள், மாணவர்களைச் சேர்ப்பதற்காக நிதி வசூலித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பிரிவெனா அமைப்பில் உள்ள சிக்கல் சூழ்நிலைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெற்றிடங்கள் இல்லாத பாடசாலைகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவதைக் கடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு இதற்காக கடிதங்களை வெளியிடுவதில்லை எனவும், எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரச பணியாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
