உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எந்தவொரு சந்தரப்பத்திலும் நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் நாடளாவிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெயர்களை அச்சிடல் முறையில் பெறுவதற்குப் பதிலாக, 14,000 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த டிஜிட்டல் பதிவேடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
காகிதத்தில் தரவுகளைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, இணையவழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் பெயர் பதிவேடு தயாரிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தல்கள், 2024 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடத்தபடும் என்றும் கடந்த முதலாம் திகதிக்குள் 18 வயதை அடைந்த இளைஞர்களும் புதிய பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
பரீட்சைகள் காரணமாக மார்ச் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது சிக்கலாக இருக்கும் என்பதால், தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த முடியும்.
கடந்த பொதுத் தேர்தலின் போது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகள் மற்றும் வருமான செலவு அறிவிப்புகளைச் சமரப்பிக்கத் தவறிய வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
