“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியைப் பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளனர்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவின் கருத்துத் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா சிங்கள பெரும்பாண்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். அரசாங்கத் தரப்பு அப்படித்தான் சொல்வார்கள். அவர்களுக்கு “பயங்கரவாதி”, மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படித் தான்.
இந்நாட்டில், 1971இல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989இலும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம், “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள்.
2015 – 2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சார்கள் இப்படிச் சொன்னார்கள். ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ்த் தேசிய கட்சிகளுடனும் இணைந்து கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம்.
தமிழ் அரசியல் கைதிகளை அதிகமாக விடுவித்து எமது நல்லாட்சி அரசாங்கம் தான். இதில் மாற்றுப் பேச்சுக்கு இடமில்லை. இதனால்த் தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியற் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
ஆனால், அன்று ஆயுதப் போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971இல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம் இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்குத் தான் வெளிச்சம்.
