யாழ்ப்பாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு கடந்த புதன்கிழமை (25.06.2025) அன்று சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வேல்க்கர் ரூட்க் அங்கு ஏற்பட்ட வன்முறைகள் விசாரிப்பதற்கு “தன்னிச்சையான, நீதியான, தடயவியல் நிபுணர்களை” ஈடுபடுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
தமிழர்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட சின்னமாகக் கருதப்படும் செம்மணி மனிதப் புதைகுழியினைப் பார்வையிடும் போதே, அவர் தனது மன உளைச்சலையும் அந்த இடத்தின் வரலாற்றுப் பயங்கர உண்மைகளையும் பகிர்ந்து கொண்டார்.
“நான் இப்போது யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் நிற்கின்றேன். கடந்த காலத்தின் அச்சம் இங்கு தெளிவாகக் காணப்படுகின்றது. இது போன்ற இடங்களை பார்வையிடுவது உணர்ச்சி மிகுந்த அனுபவமாக இருக்கிறது. என டுர்க் கூறினார்.
அவரது வருகையின் போது, கடந்த காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்தார். குறிப்பாக, 1990களின் நடுப்பகுதியில் காணாமல் போன உறவினரைப் பற்றிக் கவலையுடன் வாழும் ஒரு பெண்ணை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பு “பொருள் உள்ளடக்கிய நீதிகரமான நடவடிக்கைகள் எவ்வறளவு அவசியம்” என்பதை மீண்டும் நினைவுபடுத்தியதாக அவர் கூறினார்.
“நான் இப்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்துள்ளேன். ஒரு பெண், தன் அக்காவின் மகள் 90களில் காணாமல் போனதற்கான கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது போன்ற சந்திப்புக்கள் எப்போதும் மனதைக் உலுக்குபவை. ஏனெனில் அவர்கள் இன்னும் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற முயற்சிகள், நீதி மற்றும் உண்மை நோக்கிச் செல்லும் ஒரு அடித்தளமாக இருக்கிறது.” என்று அவர் தெரிவித்தார்.
செம்மணிப் பிராந்தியம், 1998ஆம் ஆண்டு அனைத்துலச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆண்டில், தமிழ்ப் பள்ளிச் சிறுமி கருசாந்தி குமாரசுவாமி மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சோமரத்தன ராஜபக்ச, நீதிமன்றத்தில் சாட்வியாகக் கூறும் போது, சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் சட்டவிரோதமாக படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களை புதைக்க செம்மணியில் மனிதப் புதைகுழிகள் தோற்றுவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 1999இல் நடைபெற்ற அகழ்வுகளில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அந்த இடத்தின் முழுமையான அகழ்வுப் பணிகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்படவோ விசாரணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை.
இந்த ஆண்டு (2025), கைக்குழந்தைகள் உட்பட 19 எலும்புக் கூடுகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியில், இந்த விசாரணைகளில் பன்னாட்டு நீதியமைப்புக்களின் பங்கு பற்றிய கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன.
“மனிதப் புதைகுழிகளில் விசாரணை நடைபெறும் போது, மிகத் திறமையான, தன்னிச்சையான, தடயவியல் நிபுணர்களால் நடத்தப்படும் ஆழமான விசாரணைகள் அவசியமானவை. அவர்கள் உண்மையை வெளிக்கொண்டு வரவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தீர்வையும் கொண்டு வரவும் முடியும். – என்று டுர்க் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்கள், குடிமக்கள் (சிவில்) அமைப்புக்கள், சிறிலங்கா அரசின் விசாரணை அமைப்புக்கள் நம்பமுடியாதவை, உண்மையை வெளியிடுவதில் முடக்கம் செய்பவை எனக் கூறி, அவற்றை நிராகரித்து வருகின்றனர். கடந்த கால விசாரணைகளில் சாட்சியங்களை மறைத்து வைத்தல், அரசின் தலையீடுகள் போன்றவைகள் இதற்குப் பின்னணியாகக் கூறப்படுகின்றன.
டுர்க் மேற்கொண்ட இந்த செம்மணிப் பார்வை, அவரது இலங்கைக்கான முழுமையான பயணத்தின் போது இடம்பெற்றது. அதில் அவர் “தண்டனைவிலக்கு எனும் வலைக்குள் விழாமல் இருக்க சிறிலங்கா அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றும், “நீதியற்ற தன்மை அமைதியின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும்” என்றும் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
