தமிழ் தேசியத்தின் தந்தையாக ஈழத்தமிழர்களால் கருதப்படும் தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் சிலை, மன்னாரில் யூன் 25ஆம் தேதி, 2025 அதிகாலை நேரத்தில் மோசமாக தலை சேதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் உள்ளுர் பொதுமக்களும் கடும் அதிருப்தியை வெளியிட்டனர்.
மன்னார் நகரின் மையத்தில் உள்ள மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த இந்தச் சிலை, தலையறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. துண்டிக்கப்பட்ட தலைமூடி அருகே வீசப்பட்டிருந்தது. இந்த அவமதிப்பை, தந்தை செல்வா நிறுவிய மற்றும் தற்போது வடகிழக்குப் பிராந்தியத்தில் பிரதிநிதித்துவத்தை வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி (இ.த.அ.க) கடுமையாக கண்டித்தது.
இ.த.அ.க மன்னார் கிளையின் மூத்த உறுப்பினர்கள், மன்னாரில் உள்ள இலங்கை காவல்துறையில் செவ்வாய்க்கிழமை முறையான புகார் மனுவை சமர்ப்பித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளைத் தொடங்கினர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், தமிழரசுக் கட்சி உள்ளு}ர்த் தலைவர்கள், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், மற்றும் மன்னார் முப்பானாட்சி முன்னாள் தலைவர் ஞானப்பிரகாசம் ஆன்டனி டேவிட்சன் ஆகியோர், சம்பவ இடத்தை நேரில் சென்று தங்களது கவலையை வெளிப்படுத்தினர். தந்தை செல்வாவின் வரலாற்றுப் பங்களிப்பை நினைவுகூறிய பலரும், இத்தகைய தரக்குறைவான செயற்பாடுகள் சமூக இடைவெளிகளை மேலும் தீவிரமாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தனர்.
சிறிலங்கா காவல்துறை, இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.
“தந்தை செல்வா” என தமிழர்களால் அழைக்கப்படும் செல்வநாயகம், தமிழ் தேசியத்தின் பிதாமகராகக் கருதப்படுகிறார். 1949 டிசம்பர் 18 அன்று அவர் நிறுவிய இலங்கை தமிழரசுக் கட்சி இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில் தமிழர்களின் சுயாட்சி கோரிக்கைகளை முன்வைக்கும் அரசியல் இயக்கமாக உருவானது.
தந்தை செல்வா, பண்டா-செல்வா உடன்படிக்கை மற்றும் டட்லி-செல்வா உடன்படிக்கைகள் போன்ற முக்கிய உடன்பாடுகளில் பிரதான பங்கு வகித்தார். ஆனால் இவை, சிறிலங்கா அரசினால் வாக்குறுதிகள் கைவிடப்பட்டதனால் செயலாக்கப்படவில்லை.
இவ்வாறான சிக்கல்களைக் கடந்து, அவர் தனது தமிழ்த் தேசியக் கோட்பாட்டில் உறுதித் தன்மையுடன் பயனித்தார். தமிழர்களின் உரிமைகள் மற்றும் மரியாதைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். இவரது முயற்சிகள், 1977ல் வெளியிடப்பட்ட வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு வழிவகுத்தன. அதில் சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சமவுடைமை தமிழீழமே தீர்வு என முன்வைக்கப்பட்டு மக்களாணை பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



