செம்மணிப் புதைகுழி விவகாரம் கைவிடப்படும் விடயமாகவன்றி உண்மையையும் நீதியையும் நிலைநாட்டத் தக்கதாக முன்நகரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வு பணிகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
இலங்கை தேசத்தில் இனமுரண்பாடு நிலை தோன்றியபின்னர் சிறுபான்மையின மக்கள் பல வழிகளிலும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். அவ்வப் போது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனக் கலவரங்களினால் சிறுபான்மையினத்தவர் – குறிப்பாகத் தமிழர்கள் – ஆயிரக்கணக்கில் அநியாயமாகக் கொல்லப்பட்டமையுடன் பெறுமதிமிக்க சொத்துக்களும் சூறையாடப்பட்டன.
இனமுரண்பாடு என்பது உருமாற்றம் பெற்று ஆயுதப் பிணக்காக மாற்ற முற்ற போது பல்வேறு வழிகளிலும் தமிழ்மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. படுகொலைகள், சந்தேகத்தின் பெயரிலான கைதுகள், காலவரையறையற்ற தடுப்புக்கள். விசாரணையற்று அல்லது விசாரணை முடிவுறுத்தப்படாது திட்டமிட்டு இழுத்தடிப் புச் செய்யப்பட்ட சிறைவாசம், காணாமல் போதல், பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற வற்புறுத்தல் என்றவாறாக அடக்குமுறைகளின் வடிவங்கள் நீண்ட பட்டியலைக் கொண்டன.
தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயங்களாக இன்று வரையும் இருப்பவை சட்டத்தின் பிடி யினால் இறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் தடுத்து வைப்பும், காண மால் போனவர்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையுமே. இவற்றுள்ளும் அதிக வலியையும் வேதனையையும் தருபவை.
காணாமலாக்கபட்டவர்களின் கதைகளே. தமிழர் பிரதேசங்களில் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கென நிலைநிறுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தினருக்கும் அவர்களோடு இணைந்து செயற்பட்ட துணை இராணுவக் குழுக்களுக்கும் எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கப் பட்டிருந்தன அல்லது மாறாக அவர்கள் அதிகாரங்களை உருவாக்கிக் கொண் டிருந்தார்கள். அவர்களின் மனிதாபிமானமற்ற அதிகாரவலுவினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட னர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் பலரின் துன்பக்கதைகளும் வலிகளும் பேசாப்பொருள்களாக புதையுண்டு போயிருக்கின்றன. இருந்தும் இயற்கை நீதிக்கோட்பாட்டிற்கிணங்க வெளிக் கிளம்பிய மனித குலத்திற்கும் மனிதாபிமானச் சட்டங்களுக்கும் எதிரான சில கதைகள் கவனம் கொடுக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டன.
இவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்ட பல கதைகளும் அவ்வப்போது கவனம் கொள்ளப்படுவதும் பின்னர் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்படும் விடயங்களாகவும் மாறியிருக்கின்றன. இவ்வாறானதொரு விடயப்பரப்பாக செம்மணிப் புதைகுழி விவகாரமும் விளங்குகின்றது.
ஆயினும் தொடர்ந்தும் கைவிடப்படும் விடயமாக இனியும் இது மாறிவிடக் கூடாதுஎனும் அக்கறையையாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் வலுவாகப் பதிவு செய்கின்றோம். இலங்கை இராணுவத் தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்தபோது காணமால் ஆக்கப்பட்ட பலருக்கு இன்றுவரை என்ன நடந்தது என்பது தெரியாத அவல நிலை தொடர்கின்றது. இந்த நிலையே இறுதிப் போரின் போதும் நிகழ்ந்துள்ளது. அவர்களது உறவினர் கள் பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.
போருக்குப் பின்னான சூழ்நிலையில் யார் எந்த வலுவான சத்தியும் இயற்கை நீதிக்கு மாறாக நிகழ்ந்த அவலங்களை மறைக்க நினைத் தாலும் அவை ஏதோவொரு விதத்தில் வெளிக்கிளம்பிய வண்ணமேயுள்ளன.
செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரிய வகையில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலை வலுவாக்கப்பட வேண்டும் என்பதுடன் புதைகுழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதை குழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது. உரிய நிதியை உரிய காலத் தில் விடுவித்தல், புதைகுழி அகழ்வுப் பிரதேசங்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பினை வழங்குதல், அகழ்வுப் பணி களில் ஈடுபடும் தரப்பினர் மீது அழுத் தங்களைப் பிரயோகிக்காதிருத்தல் என்பன அவசியமானவையென எமது ஆசிரியர் சங்கம் கருதுகின்றது.
இவ்விடயங்களில் எந்தவித நெகிழ்வு மற்று செயற்பட வேண்டிய பொறுப்பு ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்குரியது. இவ்விடயத்தில் மனித உரிமைகள் மீது அக்கறை கொண்ட உள்ளூர் மற்றும் சர்வதேச தரப்புக்களின் கவனத்தை எமது சங்கம் ஈர்க்கின்றது. புதை குழி அகழ்வுப் பணிகளுக்கான நிதி யுதவிகளை வழங்குதல், சர்வதேச கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்குதல் என்பன குறித்து அதிக அக்கறையெடுக்குமாறு தொடர்புடைய தரப்புக்களுக்கு நாம் அழுத்தம் கொடுக் கின்றோம். போரைக் காரணமாக வைத்து அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஈவிரக்க மற்று கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சொந்தங்களுக்கு நீதிகிடைக்கவேண்டும். அவர்களின் விபரங்கள் விஞ்ஞான ரீதியிலான பிறப்புரிமையியல் பரிசோதனைகளின் வாயிலாக வெளிப் படுத்தப்படவேண்டும். இதன் மூலம் இலங்கை நீதிக் கட்டமைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்படுத் தப்பட வேண்டும். அரசியல் நகர்வு களை மேற்கொள்ள துணைசெய்யும் காரணிகளாக அல்லது நிகழ்வுகளாக இவை கருதப்பட்டு அவ்வப்போது கையில் எடுக்கப்படுவதும் பின்னர் கைவிடப்படுவதுமான போக்குகள் முடிவுறுத்தப்படவேண்டும். குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டணை வழங்குவதற்கு அப்பால் குற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது என்பது இயற்கையின் துணையால் வெளிக் கிளம்பும் போது அதனை முன்கொண்டு செல்லவேண்டியது பொறுப்புடையவர் களின் தார்மீகக் கடமையாகும். போரின் காரணமாக நிகழ்ந்த அவலங்களுக்கு தீர்வு காணாமல் போர் உருவான மூலக்காரணத்துக்கு தீர்வு காணுவது என்பது சாத்தியமற்ற தொன்று. அத்துடன் போரின் விளைவு களுக்கு நீதி வழங்காத அதிகாரத் தரப்பு போரின் மூலப்பிரச்சனைக்கு தீர்வு தரும் எனும் நம்பிக்கையும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் உருவாகமாட்டாது என்பதும் யதார்த்தமான உண்மை.
அதுபோன்று பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்துக்கு கொடுக்கப்படும் அதே கரிசனை இவ் விடயத்திலும் பிரதிபலிக்கவேண்டும். இதனை உரிய தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.
செம்மணிப் புதைகுழி விவகாரத் தில் அர்ப்பணிப்புடன் செயற்படும் தொடர்புடைய நீதித்துறை சார்ந்தவர் கள், சட்டத்தரணிகள், சட்டமருத்துவ அதிகாரிகள், அகழ்வாராய்ச்சி நிபு ணர்கள் அனைவருக்கும் எமது சங்கம் நன்றியைபப் பகிர்கின்றது. அவர்களது பணிகளுக்கு குறுக்கேவரும் தடைகளை களைந்து இவ் விடயத்தை முன்கொண்டு செல்லுமாறு அரசை நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
புதைகுழி விவகாரங்களை சரியான முறையில் அணுகுவது இலங்கைத் தேசத்தின் முன்னேற்றத்துக்கு அவசிய மானது. அவலமாக மரித்த உயிர்க ளின் ஆத்மாக்கள் அமைதிகொள்ளும் போது தான் நாடு முன்னோக்கிச் செல்ல முடியும். மாறாக அந்த ஆத்மாக்களின் அவலக்கதைகள்தொடர்ந்தும் மூடிமறைக்கப்பட்டால் அவற்றினால் விளையும் பாதிப்புக்கள் நாட்டை மேலும் மோசமானநிலைக்கு இட்டுச் செல்லும். இதனையுணர்ந்து செம்மணிப் புதை குழி விவகாரம் கைவிடப்படும் விடய மாகவன்றி உண்மையையும் நீதியை யும் நிலைநாட்டக்கூடிய வகையில் முன் கொண்டு செல்லப்படும் விடயமாக மாறவேண்டும் என்பதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சஙகத்தினராகிய நாம் வலுவாக பதிவுசெய்கின்றோம். – என்றுள்ளது.
