வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது குறித்து அமைச்சரவை அமைச்சர்களின் கருத்தினை அறியுமாறு சட்டமா அதிபரினால் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்திற்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என ஆளும் தரப்பின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அவ்வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனக்கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
அதே போன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது காணி அமைச்சர் லால் காந்தவினால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இவ்விவகாரம் பற்றி எந்தவொரு சிறப்பான கூற்றும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே இவ்வர்த்தமானி அறிவித்தல் நீக்கம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 26ஆம் திகதி கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் செயலாளர் டி.பி.விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.
இவ்வானதொரு பின்னணியில் இன்னமும் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படாத நிலையில், இதுபற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதி அமைச்சர் கர்சன நாணயக்காரவிடமும், பிரதமர் அலுவலகத்தின் உதவிச் செயலாளர் மிகிரி தென்னக்கோனிடமும் குறுந்தகவல் ஊடாக விளக்கம் கோரியிருந்தார்.
அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகத்தின் உதவிச் செயலாளர் மிகிரி தென்னக்கோன், இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களின் கருத்தினை அறியுமாறு சட்டமா அதிபர் காணி அமைச்சுக்கு அறிவித்திருக்கின்றார் எனவும், அதற்குரிய நடவடிக்கைகள் காணி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
