சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைப்பதில் தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியமைப்பதில் புதிய இழுபறியேற்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பேரவை சார்பில் முதல்வர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டவருக்கு ஏனைய உறுப்பினர்கள் ஆதரவளிக்க மறுப்பதையடுத்து இந்த இழுபறியேற்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியினர் சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைக்க, தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கே சென்று ஆதரவு கோரியுள்ளனர்.
சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் தெரிவு நாளை (13) நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஆட்சியை கைப்பற்ற இலங்கை தமிழ் அரசு கட்சி- ஈ.பி.டி.பி- தமிழ் மக்கள் கூட்டணி கூட்டும், தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரும் மல்லுக்கட்டுகின்றனர்.
தமிழ் தேசிய பேரவையில் சாவகச்சேரியின் முன்னாள் அதிபர் க.அருந்தவபாலனும் அங்கம் வகிக்கிறார். அவர் சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். சாவகச்சேரி நகரசபையில் அவர் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தினார். ஒருவரே வென்றார். சாவகச்சேரி பிரதேசசபையில் அவரால் நிறுத்தப்பட்ட யாரும் வெற்றிபெறவில்லை.
இந்த பின்னணியில், சாவகச்சேரி நகரசபையில் தன்னால் நிறுத்தப்பட்டு, வெற்றிபெற்ற- முன்னாள் வர்த்தகர் சங்க தலைவர் பிரகாஸை தவிசாளராக்க அருந்தவபாலன் விரும்புகிறார். ஆனால், சாவகச்சேரியில் தமிழ் தேசிய பேரவை சார்பில் வெற்றியீட்டிய ஏனைய அனைத்து உறுப்பினர்களும் அவரை எதிர்க்கிறார்கள்.
இந்த இழுபறியையடுத்து, கட்சித்தலைவர் கஜேந்திரகுமார் தலையிட்டு, பங்காளியான அருந்தவபாலனின் விருப்பப்படி தவிசாளரை நியமிக்க அறிவுறுத்தினார். தற்போது அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.
தற்போது மீண்டும் உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இதையடுத்து, கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் நேற்று கலந்துரையாடல் நடந்தது. அருந்தவபாலனும் இதில் கலந்து கொண்டு, தன்னால் பரிந்துரைக்கப்படும் தவிசாளருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டார். எனினும், ஏனைய அனைத்து உறுப்பினர்களும் அதை நிராகரித்து, அருந்தவபாலனின் ஆளை தாம் பரிந்துரைக்கவும் மாட்டோம் என கூறிவிட்டனர்.
கட்சி தலைவர் கஜேந்திரகுமாரின் அறிவுத்தல் இதுதான் என செ.கஜேந்திரன் குறிப்பிட்ட போதும், யாரும் ஏற்கவில்லை.
இதேவேளை, தன்னை தவிசாளராக பரிந்துரைக்காவிட்டால், நகரசபை உறுப்புரிமை பறிபோனாலும் பரவாயில்லை, தமிழரசு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக- அருந்தவபாலனின் ஆதரவாளர் மிரட்டல் விடுவதாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்குள், சாவகச்சேரி நகரசபையில் விகிதாசார அடிப்படையில் நியமிக்கப்பட்ட தமிழ் தேசிய பேரவையின் பெண் உறுப்பினர், அந்த பகுதியில் வசிக்கவில்லையென தமிழரசு கட்சியின பின்னணியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த பெண், நகரசபை எல்லைக்குள் வசிக்காவிட்டாலும், நகரசபை எல்லைக்குள் சொத்து வைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை முறியடிக்கலாம் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயினும், வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்னர்- உடனடியாக இடைக்கால தடை விதிக்கப்பட்டு- அந்த பெண் வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனாலே, அது தமிழரசு கட்சிக்கு வெற்றிதான்.
இதேவேளை, சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைக்க தமக்கு ஆதரவளிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி பிராந்திய அலுவலகத்துக்கே சென்று, இலங்கை தமிழ் அரசு கட்சி நேற்று ஆதரவு கோரியதாக அறிய முடிந்தது.
சாவகச்சேரி நகரசபை முன்னாள் தவிசாளர், தற்போது தவிசாளராக பரிந்துரைக்கப்பட்டவர் உள்ளிட்ட 3 பேர், நேற்று தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு சென்று ஆதரவு கோரினர்.
இதன்போது, தமக்கு உப தவிசாளர் பதவி தருவதாக இருந்தால், ஆதரிக்க முடியுமென தேசிய மக்கள் சக்தி நிபந்தனை விதித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரத்தை கட்சியுடன் கலந்துபேசி தெரிவிப்பதாக குறிப்பிட்டு, தமிழரசு கட்சியினர் திரும்பியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியினர் தமக்கே ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் சாவகச்சேரி நகரசபையை தாம் கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதியானது என்றும் தமிழரசு கட்சியின் சாவகச்சேரி பிரமுகர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
